சச்சின் சாதனையை நெருங்க முடியுமா?

சச்சினின் 100 சதம் சாதனையை தற்போதுள்ள முன்னணி வீரர்களால் நெருங்கக்கூட முடியாது,'' என, பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குகிறார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் கில்கிறிஸ்ட்.

சச்சின் சாதனை குறித்து இவர் கூறியது:

சச்சின் சிறந்த வீரராக ஜொலிக்கிறார். 22 ஆண்டுகளாக ஒரே விதமாக விளையாடி வருவதால் தான் சிறந்த வீரராக உள்ளார். சச்சினின் 100வது சதம் என்ற சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்பது உண்மையில் சந்தேகம் தான். ஏனெனில், இவருக்கும் மற்றவர்களுக்கு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

உதாரணத்துக்கு ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங்கை எடுத்துக் கொண்டால், சச்சினுக்கு அடுத்து இவர்தான் தற்போது சிறந்த வீரர். இவர் டெஸ்டில் 40, ஒரு நாளில் 30 என, 71 சதம் தான் அடித்துள்ளார். இவரைவிட, சச்சின் 29 சதங்கள் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து பாண்டிங் ஓய்வு பெற்றுவிட்டார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே (3,5), வங்கதேசத்துக்கு (5, 1) எதிராக மட்டும், 14 சதங்கள் சச்சின் அடித்துள்ளார் என்ற விமர்சனங்கள் தவறானது. அப்படிப் பார்த்தாலும், பாண்டிங்கை விட 15 சதங்கள் சச்சின் முன்னிலையில் தான் உள்ளார்.

சிக்கலான நிலை:

தற்போது இந்திய அணி சிக்கலான நிலையில் உள்ளது. டிராவிட் ஓய்வு பெற்று விட்டார். அடுத்து லட்சுமண், சச்சின் கிளம்பும் போது, அணியில் வெற்றிடம் ஏற்படும். இதை நிரப்புவது கடினம். இதேபோன்ற நிலைதான் எங்களுக்கும் ஏற்பட்டது.

கோஹ்லிக்கு பாராட்டு:

சமீபத்திய போட்டிகளில் அடுத்தடுத்து அசத்தி வரும் விராத் கோஹ்லி, வேகமாக வளர்ந்து வருகிறார். உலகின் தற்போதுள்ள சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் டிராவிட்டுக்கு மாற்றாக வருவாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதிகப்படியான "டுவென்டி-20' போட்டிகள் விளையாடியதால் தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் தோல்வி ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது.

ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகவில்லை என்பதே உண்மை. எங்கள் பவுலர்கள் அசத்தியதால், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

பயிற்சியில் பங்கேற்பு:

மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் போட்டியில் சென்னையை சந்திக்கிறது. இதனிடையே, வலது கால் பாதத்தின் முன்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு, சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்ற சச்சின், நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த அணியின் முகாமில் பங்கேற்றார்.

சச்சின்-டிராவிட் மோதல் உண்மையா?

டிராவிட்டுக்கு நடந்த பாராட்டு விழாவில் சச்சின் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இருவரது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் "பெருஞ்சுவர்' என வர்ணிக்கப்படும் டிராவிட், சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி பி.சி.சி.ஐ., சார்பில் மும்பையில் விழா நடந்தது. இதில், கும்ளே, கேப்டன் தோனி, லட்சுமண், விராத் கோஹ்லி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

ஆனால், சச்சின் மட்டும் கலந்து கொள்ளவில்லை. கால் விரல் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள லண்டன் பறந்து விட்டார். இதையடுத்து பாராட்டு விழாவை சச்சின் திட்டமிட்டு புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகின.

இவ்விழாவில் பேசிய டிராவிட், சச்சின் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் கும்ளே, லட்சுமண், கங்குலி ஆகியோரை புகழ்ந்து பேசினார். இது டிராவிட்-சச்சின் <உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை உணர்த்துவது போல் இருந்தது. இருவர் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகளும் வெளியாகின.

டிராவிட் மறுப்பு:

இதனை மறுத்த டிராவிட் கூறியது:

நானும் சச்சினும் 16 ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். இருவருக்கும் இடையிலான நட்பு அப்படியே தொடர்கிறது. எங்களுக்குள் எவ்வித விரிசலும் இல்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான செய்திகள் எல்லாம் "மீடியா'வின் கற்பனை.

பாராட்டு விழாவில் என்னை வாழ்த்தி பேசியவர்களுக்கு மட்டும் நன்றி சொன்னேன். சச்சின் பங்கேற்காததால், அவரது பெயரை சொல்லவில்லை. இந்த விழாவில் பங்கேற்க முடியாது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமாக ஏற்கனவே சச்சின் தெரிவித்தார். தனது கால் காயத்துக்காக லண்டன் சென்று டாக்டரிடம் ஆலோசனை பெற இருப்பதாக சொன்னார்.

ஐ.பி.எல்., ஆர்வம்:

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குவது பெருமையாக உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த வார்ன் இடத்தை நிரப்புவது கடினம். இவரை தனிப்பட்ட முறையில் "மிஸ்' பண்ணுவேன். சிறப்பாக செயல்பட்டு, தொடரை வெற்றிகரமாக துவக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.

யுவராஜ் இடம் பெறாததும் ஐ.பி.எல்., தொடருக்கு பெரும் இழப்பாக இருக்கும். இவர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் "பிசி'யாகவே உள்ளேன். எனது வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டில் இருப்பது போன்று உணரவில்லை. ஏனென்றால் ஐ.பி.எல்., தொடர் துவங்கப் போகிறது. இதற்காக தயாராக வேண்டும் என்பதால், எப்போதும் போல சுறுசுறுப்பாகவே இருக்கிறேன்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

ஐ.சி.சி., ரேங்கிங் தோனி, அஷ்வின் முன்னேற்றம்

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி வீரர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி, சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப்பட்டது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி ஒரு இடம் முன்னேறி, நான்காவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் விராத் கோஹ்லி, மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

முதலிரண்டு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, டிவிலியர்ஸ் ஆகியோர் உள்ளனர். மற்ற இந்திய பேட்ஸ்மேன்களான காம்பிர் (17வது இடம்), சேவக் (25வது), சச்சின் (27வது), ரெய்னா (32வது) ஆகியோர் "டாப்-50' வரிசையில் உள்ளனர்.


அஷ்வின் முன்னேற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், நான்கு இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 6வது இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதே இம்முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.

"டாப்-3' வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டசாட்சொபே, பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்ரிக்காவின் மோர்னே மார்கல் ஆகியோர் உள்ளனர்.

மற்ற இந்திய பவுலர்களான ரவிந்திர ஜடேஜா (29வது இடம்), ஹர்பஜன் (32), ஜாகிர் கான் (34), பிரவீண் குமார் (35), முனாப் படேல் (49), வினய் குமார் (50) ஆகியோர் "டாப்-50' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.


சாகிப் முதலிடம்:

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் வாட்சன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், அப்ரிதி, தென் ஆப்ரிக்காவின் காலிஸ் ஆகியோர் "டாப்-5' வரிசையில் உள்ளனர்.


இந்தியா "நம்பர்-3':

அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்த ஆஸ்திரேலிய அணி, நான்கு ரேங்கிங் புள்ளிகள் குறைந்து 123 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

தென் ஆப்ரிக்க அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆசிய கோப்பை தொடரில் மூன்று லீக் போட்டியிலும் தோல்வி கண்ட இலங்கை அணி, ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இங்கிலாந்து அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி, 6வது இடத்தில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 7வது இடத்தை நியூசிலாந்துடன் பகிர்ந்து கொண்டது.

ஓய்வு எண்ணம் இல்லை - சச்சின் உறுதி

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய வீரர் சச்சின், தனது 100வது சர்வதேச சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் உட்பட பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறியது: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நிறைய சாதனைகளை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இச்சாதனைகள் என்றாவது ஒருநாள் முறியடிக்கப்படலாம். இவைகளை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும் என்பது விருப்பம். எனவே இதனை ஒரு இந்தியரால் மட்டுமே முறியடிக்க முடியும் என நம்புகிறேன்.

ஓய்வு எப்போது:

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு கிடையாது. இது குறித்து நான் மட்டுமே முடிவு செய்வேன். யாரும் ஆலோசனை கூறத் தேவையில்லை. ஏனெனில், இளம் வயதில் கிரிக்கெட் விளையாட முடிவு செய்த போது யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை.

ஓய்வு குறித்து ஆலோசனை கூறும் எவரும், அணியில் இடம் வாங்கி கொடுக்கவில்லை. சரியான நேரத்தில் எனது ஓய்வை முறைப்படி அறிவிப்பேன். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஓய்வை அறிவித்துவிடுங்கள் என சிலர் கூறுகின்றனர். ஒரு வீரர், நல்ல "பார்மில்' இருக்கும் போது ஓய்வை அறிவிப்பது சுயநலம். இந்த நேரத்தில் தான் தனது திறமையை நாட்டுக்காக அர்ப்பணிக்க முடியும்.

அணிக்கு முன்னுரிமை:

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 100வது சதம் அடித்த போதும், அதனை பெரிதாக கொண்டாட முடியவில்லை. ஏனெனில் சொந்த சாதனையை காட்டிலும், அணியின் வெற்றியே முக்கியம். இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், சாதனை குறித்து சிந்திக்கவில்லை.

சிறந்த பரிசு:

முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், சிறந்த டெஸ்ட் கனவு அணியை அறிவித்தார். அதில் எனது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனை என்வாழ்நாளில் கிடைத்த சிறந்த பரிசாக கருதுகிறேன்.

"ஹீரோ' தந்தை:

என் தந்தை தான் எனக்கு "ஹீரோ'. ஏனெனில் அவரில்லாமல், நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. இவர், எனது வெற்றி, தோல்விகளின் போது உடனிருந்து நிறைய ஆலோசனைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இவரது ஆலோசனைகள், கிரிக்கெட்டில் சாதிக்க உதவியது.

நிறையவேறிய கனவு:

இந்திய அணிக்காக விளையாட வேண்டும், உலக கோப்பை வென்று தர வேண்டும் என்பது இளமை பருவ கனவு. இவை இரண்டு நிறைவேறின. என் வாழ்வில் இதை விட சிறந்தது வேறொன்றும் இல்லை என நினைக்கிறேன். கிரிக்கெட் போட்டியை முழுமனதுடன் நேசித்ததால் மட்டுமே சிறப்பாக விளையாட முடிகிறது. என்னால் முடிந்த வரை இந்திய அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்.

2015 உலக கோப்பை:

வரும் 2015ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முன்னதாக கடந்த 2007ல், வரும் 2011 நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் விளையாடுவீர்களா எனக் கேட்டனர். இதேபோல அப்போது என்னால் பதில் கூற முடியவில்லை. ஆனால், 2011ல் விளையாடினேன். எனவே எதிர்காலம் குறித்து என் கையில் ஒன்றுமில்லை. கடவுள் தான் பதில் சொல்ல முடியும்.

22 ஆண்டுகள்:

உலக கோப்பை தொடரில், 99வது சதம் அடித்தேன். அப்போது யாரும் 100வது சதம் குறித்து அதிகம் பேசவில்லை. அனைவரது கவனமும் இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் உலக கோப்பைக்கு பின், 100வது சதம் குறித்து மீடியாவில் அதிகளவில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் எனது கவனம் முழுவதும் இந்திய அணிக்காக விளையாடுவதில் மட்டுமே இருந்தது. உலக கோப்பைக்காக 22 ஆண்டுகள் காத்திருந்த எனக்கு, 100வது சதம் அடிக்க ஒரு ஆண்டு காத்திருந்ததில் எவ்வித கவலையும் இல்லை.

காயத்தால் பாதிப்பு:

கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது, முன்னணி வீரர்கள் நிறைய பேர் காயமடைந்ததால், மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. இதேபோல ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக, வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனவே வரும் தொடர்களில் காயம், உடற்தகுதி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து இந்திய வீரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு மீண்டும் "நம்பர்-1' அந்தஸ்தை பெற்றுத் தர முடியும்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் - சச்சின்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்து நேரம் வரும் போது தாமே முடிவு செய்து அறிவிப்பேன், இது குறித்து யாரும் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. எனது விருப்பம் உள்ளவரை ஆடுவேன் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.


விழா முடிந்ததும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனையும், மகிழ்ச்சியும் ஆகும்.


எனது சாதனையை இந்தியர் முறியடிப்பார் :


எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. நான் எப்போது ஒய்வு ‌பெற வேண்டும் என்பதை யாரும் எனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரம் வரும்போது நானே ஓய்வை அறிவிப்பேன். இதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. விருப்பம் உள்ளவரை இந்தியாவுக்காக ஆடுவேவன்.


எனது 17 வயதில் இருந்த வேகமும் விவேகமும் 38 வயதில் சிறிது தடுமாறத்தான் செய்கிறது. எனினும் அதை சமாளித்து விளையாடுகிறேன். என்னுடைய திறமையை இன்னும் நிரூபிக்க வேண்டியதில்லை. இருப்பினும் இன்னும் நான் எனது நம்பிக்கையை இழக்கவில்லை.


100 சதம் அடித்த அந்த கடினமான தருணத்தில் என்னை ஊக்கப்படுத்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துடன் நடந்த போட்டியில் யோகம் இல்லாமல் போனது. பி.சி.சி.ஐ., ஆற்றும் பணி மகத்தானது.

டெஸ்ட் போட்டிகள் மிகவும் முக்கியமானது. இது பெரும் சவாலானதாக இருந்தது. கிரிக்கெட் வாழ்க்கையில் எனது தந்தை எனக்கு முதல் ஹீரோ . 100 வது சதம் அடிக்க நான் சந்தித்த அந்த வேளை மிக கடினமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த பாராட்டு விழாவில் சச்சினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது

மீண்டும் நீண்ட முடி வளர்க்கிறார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீண்டும் நீண்ட முடி வளர்க்க முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி.

மிக நீண்ட கூந்தலுடன், விக்கெட் கீப்பராக அறிமுகமான தோனி, கேப்டன் பதவியை பெற்றதும் முடியை குறைத்துக்கொண்டார்.

கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற அன்றே, மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இன்று கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் மீண்டும் நீண்ட கூந்தல் வளர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து பழைய தோனியை மீண்டும் பார்க்கலாம் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

ஹாட்ரிக் தோல்வியடைந்த அவமானத்தில், இலங்கை அணி

ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தகுதி பெற்றன. இன்று நடந்த கடைசி லீக் போட்டியில், வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி, இன்று மிர்புரில் நடக்கிறது. "டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், பவுலிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா (5), சங்ககரா (6) ரன்களுக்கு அவுட்டாகினர். தில்ஷன் (19), கபுகேதிரா (62), திரிமான்னே (48), தரங்கா (48) ஆறுதல் தந்தனர். இலங்கை அணி 49.4 ஓவரில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


இலக்கு மாற்றம்:

உணவு இடைவேளையின் போது மழை பெய்ததால், "டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி, 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என, இலக்கு மாற்றப்பட்டது. வங்கதேச அணியின் நஜிமுதீன் (6), இஸ்லாம் (2), முஷ்பிகுரும் (1) ஏமாற்றினர்.

பின் தமிம் இக்பால் (59), சாகிப் அல் ஹசன் (56) அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் மகமதுல்லா (32), நாசிர் ஹொசைன் (36) கைகொடுக்க, வங்கதேச அணி 37.1 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பைனலில் வங்கதேசம்:

இந்த வெற்றியை அடுத்து, 8 புள்ளிகள் பெற்ற வங்கதேசஅணி, வரும் 22ம் தேதி நடக்கும் பைனலில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்திய அணி 8 புள்ளிகள் பெற்ற போதும், லீக் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றதால், பைனல் வாய்ப்பை இழந்தது.

இத்தொடரில் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும், "ஹாட்ரிக் தோல்வியடைந்த அவமானத்தில், இலங்கை அணியும் வெளியேறியது.

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

நூறாவது சதத்துக்காக சச்சின் ஆடிய ஆமை வேக ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசம் போன்ற பலம் குன்றிய அணி, அலட்சியமாக இந்தியாவை வென்றது.

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 48 என 99 சதங்கள் அடித்திருந்த இவர், ஒரு வழியாக வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், தட்டுத்தடுமாறி 100வது சதம் அடித்தார். கடைசியாக மார்ச், 2011ல் சதம் அடித்த பின், 100வது சதம் அடிக்க, சச்சினுக்கு 34 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது.

"ஆமை' தோற்றது:

துவக்கத்தில் வேகமாக விளையாடிய சச்சின், 63 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். பின் வேகத்தை குறைத்தார். 80 ரன்களை எட்டிய போது 102 பந்துகளை எதிர் கொண்டிருந்த இவருக்கு, அடுத்த 10 ரன்களை எடுக்க 22 பந்துகள் தேவைப்பட்டது. ஒருவழியாக 100வது சதம் அடித்த போது, 138 பந்துகளை சந்தித்து இருந்தார்.

147 பந்துகளில்...

வங்கதேசம் போன்ற பலம் குன்றிய பவுலர்களுக்கு எதிராக, 147 பந்துகளில் 114 ரன்கள் தான் எடுத்தார். "ஸ்டிரைக் ரேட்' 77.55. இப்படி, அதிக பந்துகளை "விழுங்கியதால்' அடுத்த வந்த தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு ஓவர்கள் இல்லாமல் போனது. இதே சச்சின் தான், 2010ல் குவாலியர் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 147 வது பந்தில் 200 ரன்கள் எடுத்தார்.

ரசிகர்கள் வெறுப்பு:

நூறாவது சதத்துக்காக அதிக பந்துகளை வீணடித்ததால், வங்கதேசம் அணிக்கு எதிராக, இந்தியா 300 ரன்களை எட்ட முடியாமல் போனது. வங்கதேசத்தின் நாசிர் (ஸ்டிரைக் ரேட், 93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் விரைவாக ரன்கள் எடுத்து, இந்திய அணியை அலட்சியமாக வீழ்த்த, ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.

"சீனியர்' வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவதால், 20 ரன்கள் எதிரணிக்கு அதிகமாக செல்கிறது என, தோனி வெளிப்படையாகவே கூறியிருந்தார். அப்படி இருந்தும் இன்னும், நாட்டுக்காக விளையாடுவேன் என்ற பெயரில், சொந்த சாதனைகளை இலக்காக வைத்து களமிறங்கக் கூடாது.

சிக்கலான நிலை:

இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும்.

இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்றால், சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சச்சின் நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தெண்டுல்கரின் சதத்தால் வெற்றியே அதிகம்

தெண்டுல்கர் சதம் அடித்தால் இந்திய அணி வெற்றி பெறாது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு அவர் தனது 100-வது சதத்தை அடித்து உலக சாதனை படைத்த போது இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் தெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா அதிகமான போட்டிகளில் வெற்றியே பெற்று இருக்கிறது என்று புள்ளி விவரம் சொல்கிறது.
5 அடி 5 அங்குலம் கொண்ட தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தனது 23 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் நேற்று 100-வது சதத்தை அடித்து முத்திரை பதித்தார். 188 டெஸ்டில் 51 சதமும், 462 ஒருநாள் போட்டிகளில் 49 சதமும் அடித்துள்ளார்.

இந்த 100 சதத்தில் இந்திய அணி 53 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர் 49 சதம் அடித்து உள்ளார். இதில் 33 சதத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜாவில் அவர் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றதை ரசிகர்கள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அவரது 14 சதம் வீண் ஆனது. ஒரு சதம் டையில் முடிந்தது. ஒரு சதத்தில் முடிவு இல்லை.
டெஸ்டில் 51 செஞ்சூரி அடித்துள்ளார். இதில் 20 சதம் வெற்றியை பெற்று கொடுத்து இருக்கிறது. இதில் வெளிநாட்டு மைதானங்களில் 9 வெற்றி அடங்கும். 11 சதத்தால் தோல்வி ஏற்பட்டது. 20 சதம் “டிரா” ஆனது.
சர்வதேச போட்டியில் 100-வது சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த தெண்டுல்கரை யாரும் தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் உள்ளார். ரிக்கிபாண்டிங் 71 சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
தெண்டுல்கரை தொட அவருக்கு இன்னும் 29 சதங்கள் வேண்டும். தெண்டுல்கரின் 100-வது சதம் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். 20 ஆண்டுகளுக்கு மேல் விளையாடினால் மட்டுமே அது முடியும்.
தெண்டுல்கர் அந்த அளவுக்கு உடல் தகுதியுடன் இருந்து தனது 38-வது வயதிலும் சதம் அடித்து இளைஞர் போல் திகழ்கிறார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் தற்போதை கிரிக்கெட் உலகின் சகாப்தம் ஆவார்.

சச்சின் நூற்றுக்கு நூறு சதம் வீண்

ஆசிய கோப்பை லீக் போட்டியில், "உலக சாம்பியன்' இந்திய அணி, வங்கதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சச்சினின் 100வது சதம் வீணானது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என, நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மிர்புரில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன.

நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், "பீல்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் வினய் குமார் நீக்கப்பட்டு டின்டா சேர்க்கப்பட்டார்.


காம்பிர் அதிர்ச்சி:

இந்திய அணிக்கு சச்சின், காம்பிர் ஜோடி துவக்கம் கொடுத்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், இம்முறை 6 ரன்னுக்கு "போல்டாகி' அதிர்ச்சி தந்தார். பின் ஹொசைன் பந்தில் பவுண்டரி அடித்த சச்சின், சாகிப் அல் ஹசன் ஓவர்களில் சிக்சர், பவுண்டரி விளாசினார்.

கோஹ்லி அரைசதம்:

கடந்த இரு போட்டிகளில் சதம் அடித்து இருந்த விராத் கோஹ்லி, நேற்றும் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் சர்வதேச அளவில் தனது 21வது அரைசதத்தை எட்டினார். துவக்கத்தில் வேகம் காட்டிய சச்சின், போகப் போக நிதானத்துக்கு மாற, "ரன்ரேட்' குறைந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த நிலையில், விராத் கோஹ்லி (66) அவுட்டாகினார்.

சச்சின் சதம்:

அடுத்து வந்த ரெய்னா, அதிரடியாக ரன்கள் சேர்க்க, அவ்வப்போது வந்த பவுண்டரிகளால், ஸ்கோர் சற்று வேகமாக உயர்ந்தது. மறுமுனையில் 100வது சதம் அடிக்கும் முயற்சியில் இருந்த சச்சின், ஒவ்வொரு ரன்களாக சேர்த்து இலக்கை நெருங்கினார்.

சாகிப் அல் ஹசன் பந்தை சந்தித்த சச்சின், "ஸ்கொயர் லெக்' திசையில் பந்தை தட்டிவிட்டு, வரலாற்று சிறப்பு மிக்க ரன்னை எடுத்து, சர்வதேச அரங்கில் 100வது சதத்தை எட்டி அசத்தினார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், சச்சின் எடுத்த முதல் சதம் இதுதான்.

அடுத்தடுத்து "அவுட்':

இந்த உற்சாகத்தில் ஹொசைனின் அடுத்த ஓவரில், அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார் சச்சின். இதே ஓவரில் சிக்சர் விளாசிய ரெய்னா, தனது 21வது அரைசதம் அடித்தார். இவர் 51 ரன்னில் திரும்பினார். அடுத்த பந்தில் சச்சினும் (114 ரன்கள், 147 பந்து) அவுட்டாகினார். ரோகித் சர்மா (4) நீடிக்கவில்லை.

கடைசிநேரத்தில் தோனி கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. தோனி (21), ஜடேஜா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

தமிம் அபாரம்:

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு நஜிமுதீன் (5) துவக்கத்திலேயே அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தார். தமிம் இக்பாலுடன், ஜகுருல் இஸ்லாம் இணைந்தார். இந்த ஜோடி இந்திய வீரர்களின் பவுலிங்கை எளிதாக சந்திக்க, ஓவருக்கு ஒரு பவுண்டரி என சீராக கிடைத்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிம் இக்பால், தனது பங்கிற்கு 21வது அரைசதம் அடிக்க,
மறுமுனையில் இஸ்லாம் தனது முதல் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில், இஸ்லாம் (53) ஜடேஜா சுழலில் வீழ்ந்தார்.

சாகிப் அதிரடி:

சிறிது நேரத்தில் தமிம் இக்பால் (70) அவுட்டானார். டின்டா வீசிய 37வது ஓவரில், சாகிப் அல் ஹசன் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, 18 ரன்கள் எடுக்கப்பட்டது. அஷ்வின் பந்தில் சிக்சர் அடித்த சாகிப், இர்பான் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார். இவர் 49 ரன்களில் "ஸ்டம்டு' ஆக, லேசான தடுமாற்றம் ஏற்பட்டது.

மறுமுனையில் நாசிர் ஹொசைன், 3வது அரைசதம் அடிக்க, இர்பான் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர் அடித்த, முஷ்பிகுர் ஆட்டத்தை தன்வசப்படுத்தினார். தொடர்ந்து மிரட்டிய இவர், பிரவீண் குமார் ஓவரில் பவுண்டரி, சிக்சர் என அடுத்தடுத்து விளாசினார். நாசிர் ஹொசைன் 54 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணி 49.2 ஓவரில் 293 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் (46), மகமதுல்லா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஒருநாள் அரங்கில் உலக சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

நாளை நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி கட்டாயம் வென்றால் மட்டுமே, பைனலுக்கு செல்ல முடியும்.

முதல் "2000'

சர்வதேச அளவில் 2000 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் இந்திய வீரர் சச்சின். இதுவரை 462 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 49 சதங்கள் உட்பட 18,374 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8044 ரன்கள் பவுண்டரி (2011) மூலம் வந்தவை. இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா (1500 பவுண்டரி) உள்ளார்.

டெஸ்ட் அரங்கில் "டாப்'

சர்வதேச டெஸ்ட் அரங்கில் சச்சின் இதுவரை 188 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 51 சதங்கள் உட்பட மொத்தம் 15,470 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள் விவரம்:

வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்/அரைசதம்

சச்சின் (இந்தியா) 188 15,470 51/65
டிராவிட் (இந்தியா) 164 13,288 36/63
பாண்டிங் (ஆஸி.,) 162 13,200 41/61

ஒருநாள் முதல்வன்

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் இதுவரை 49 சதங்கள் உட்பட 18,374 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள் விவரம்:

வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்/அரைசதம்

சச்சின் (இந்தியா) 462 18,374 49/95
பாண்டிங் (ஆஸி.,) 375 13,704 30/82
ஜெயசூர்யா (இலங்கை) 445 13,430 28/68

இன்னும் எட்ட வேண்டியவை

டெஸ்ட், ஒருநாள் அரங்கில் மொத்தம் 100 சதம் அடித்துள்ள சச்சின், ஒருநாள் போட்டிகளில் இதுவரை 95 அரைசதம் அடித்துள்ளார். இன்னும் 5 அரைசதம் அடித்து அரைசதத்தில் "100' என்ற இலக்கை எட்ட வேண்டும்.

* ஒரு நாள் அரங்கில் 49 சதம் அடித்துள்ள இவர், 50வது சதம் அடிக்க விரும்பலாம். இந்த இலக்குகளை எட்டி விட்டு தான் ஓய்வு பெறுவாரா...

அஷ்வின் "50'

நேற்று சாகிப் அல் ஹசனை அவுட்டாக்கிய அஷ்வின், மிகவேகமாக 50 விக்கெட் (34 போட்டி)
வீழ்த்திய, முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் ஹர்பஜன் சிங், 40 போட்டிகளில் இந்த இலக்கை எட்டியுள்ளார்.

சச்சின் மந்தமான ஆட்டம்

நேற்று சச்சின், 100வது சதம் அடிப்பதை மனதில் கொண்டு, டெஸ்ட் போட்டியை போல, மந்தமாக விளையாட, ஸ்கோர் வேகம் குறைந்தது.

147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த இவரது "ஸ்டிரைக் ரேட்' 77.55. ஆனால் வங்கதேசத்தின் நாசிர் (93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தினர்.

கடந்த 2007 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியாவை வென்ற வங்கதேச அணி, நேற்று மீண்டும் சாதித்தது.

"வில்லன்' இர்பான்

நேற்று வங்கதேச அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் பவுலிங் செய்த இர்பான் பதான், அடுத்தடுத்து இரு சிக்சர் விட்டுக் கொடுக்க, போட்டியின் முடிவு தலைகீழானது. இந்திய ரசிகர்களின் வில்லனாக மாறினார் இர்பான்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் - பைனலில் பாகிஸ்தான்

ஆசிய கோப்பை தொடர் பைனலுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. இன்று நடந்த லீக் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது.

இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. "டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு, இம்முறை ஜெயவர்தனா (12, தில்ஷன் (20), திரிமான்னே (7) அதிர்ச்சி தந்தனர். சண்டிமால், "டக் அவுட்டாகினார்.

சங்ககரா (71), தரங்கா (57) அரைசதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 45.4 ஓவரில் 188 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் சீமா 4 விக்கெட் வீழ்த்தினார்.


பாக்., வெற்றி:

எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (11), ஜாம்ஷெட் (18), யூனிஸ் கான் (2) ஏமாற்றம் தந்தனர்.

பின் இணைந்த உமர் அக்மல் (77), மிஸ்பா (72) ஜோடி ஜோரான ஆட்டத்தை வெளிப்படுத்த, பாகிஸ்தான் அணி, 39.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 9 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

முடியும் நிலையில் கீமோதெரபி - தேறுகிறார் யுவராஜ்

கேன்சருக்கான இறுதி கட்ட சிகிச்சை 4 நாட்களில் முடிந்துவிடும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், 30. நுரையீரலில் ஏற்பட்ட "கேன்சர்' கட்டியால் பாதிக்கப்பட்டார். இதற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரபி' சிகிச்சை பெற்று வருகிறார்.

வரும் மே முதல் வாரத்தில், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிகிச்சையின் காரணமாக அவர் தலை வழுக்கையாக மாறியது.

இதை பழைய நிலைக்கு மாற்றும் சிகிச்சை, ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதால் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் 274 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 8,051 ரன்களும் 37 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1,775 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த உலக கோப்பை போட்டியில், இவர் தொடர் நாயகன் பட்டம் வென்றார்.

சிகிச்சை குறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,""கீமோதெரபி' இறுதி சுற்று சிகிச்சை 4 நாட்களில் முடிந்துவிடும். இதிலிருந்து விரைவில் குணமடைந்து விடுவேன்'' என்றார்.

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 304 ரன்கள் எடுத்தது. காம்பீர் 100 ரன்களும், கோக்லி-108 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது. தில்ஷன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜெயவர்த்தனாவும், சங்ககாராவும் சிறப்பாக விளையாடினர். ஜெயவர்த்தனா அதிரடியாக விளையாடி 78 ரன்கள் எடுத்தார்.

சங்ககாரா 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 45.1 ஓவரில் 254 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் இர்பான் பதான் 4 விக்கெட்களையும், அஸ்வின், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கவுதம் காம்பீருக்கு வழங்கப்பட்டது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு - இந்தியா-பாக்., அரையிறுதியில் அதிர்ச்சி

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை "பாலிவுட்' நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டியை வைத்து பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது.

பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளின் முடிவை சூதாட்ட ஏஜன்ட்கள் நிர்ணயிக்கின்றனர். இவர்கள் சில முன்னணி வீரர்களை தங்கள் வலைக்குள் வைத்துக் கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2010ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் "ஸ்பாட்-பிக்சிங்' எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, ஜெயில் தண்டனை பெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் இங்கிலாந்தின் எசக்ஸ் கவுன்டி அணியை சேர்ந்த மெர்வின் வெஸ்ட் பீல்டு என்ற பவுலர், சூதாட்ட புள்ளிகளிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கும் ஜெயில் தண்டனை கிடைத்தது.


ரகசிய ஆய்வு:

தற்போது, சூதாட்ட பிரச்னை குறித்து பிரிட்டன் பத்திரிகை "சண்டே டைம்ஸ்' ரகசிய புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன் வேண்டுமென்றே மந்தமாக ஆட, அவருக்கு ரூ. 35 லட்சம், பவுலர்கள் ரன்களை வாரி வழங்க, ரூ. 40 லட்சம், போட்டியின் முடிவை உறுதி செய்யும் வீரர் அல்லது நிர்வாகிக்கு ரூ. 6 கோடி வரை சூதாட்ட புக்கிகள் கொடுப்பது தெரிய வந்துள்ளது.


உலக கோப்பை:

கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது. இப்போட்டியிலும் பெருமளவு சூதாட்டம் நடந்துள்ளதாம். சூதாட்டக்காரர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களை தங்களது வலைக்குள் வைத்துள்ளனர். இவர்களை கவர, பாலிவுட் நடிகை ஒருவரை பயன்படுத்திய விஷயத்தையும் "சண்டே டைம்ஸ்' அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நடிகையை பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


கவுன்டியில் "ஜோர்':

தவிர, இங்கிலாந்தின் கவுன்டி போட்டிகளில் தான் சூதாட்டம் ஜோராக நடக்கிறதாம். இதனை டில்லியை சேர்ந்த சூதாட்ட ஏஜன்ட் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு முக்கியமில்லாத போட்டிகள் நடப்பதால், யாரும் கண்காணிப்பதில்லை. இதனால், எவ்வித சிரமும் இல்லாமல் பெருமளவு பணம் சம்பாதிக்க முடிவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

சூதாட்டம் தொடர்பாக தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐ.சி.சி.,), "சண்டே டைம்ஸ்' பத்திரிகை வழங்கியுள்ளது. இதன் மீது ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது. இதில், பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஐ.சி.சி., செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""சட்டவிரோதமான கிரிக்கெட் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் கோடிக்கணக்கில் பந்தய தொகை கட்டப்படுகிறது.

எனவே, போட்டியின் முடிவை சூதாட்ட புள்ளிகள் மாற்றி விடுகின்றனர் என்ற அச்சம் தொடர்கிறது. "சண்டே டைம்ஸ்' பத்திரிகை குழுவினருக்கு நன்றி. இவர்கள் தந்த தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்தப்படும்,''என்றார்.

டிராவிட் அபாரம்.. அருமை.. அற்புதம்... சிலாகிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட்டின் "பேட்டிங் திறனை கிரிக்கெட் பிரபலங்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளாக அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக இருந்தார் டிராவிட். அணியின் "பெருஞ்சுவர் என போற்றப்பட்ட இவர், நேற்று முன் தினம் ஓய்வை அறிவித்தார். சக வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் அன்பை பெற்றவர் டிராவிட்.

கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எவ்வித சர்ச்சையிலும் சிக்காத இவர், "ஜென்டில்மேன் வீரராக தன்னை அடையாளம் காட்டினார். இவர் ஓய்வு பெற்றாலும், இவரது சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.

இதே போல கெய்ல் உள்ளிட்ட வெளிநாட்டு நட்சத்திரங்களும் வாழ்த்தியுள்ளனர். இவரது ஆட்டத்திறனை பாராட்டிய கிரிக்கெட் பிரபலங்களின் கருத்து...

கிரிக்கெட் களத்தில் டிராவிட் ஒரு "ஹீரோ. உண்மையான விளையாட்டு வீரர். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்கு பிறகு அன்னிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டவர். விளையாடும் "ஸ்டைல், மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் டிராவிட் ஒரு சாம்பியன்.
-கபில் தேவ்

அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடியவர். நிலைமைக்கு ஏற்ப விவேகமாக "பேட் செய்வார். இளம் வீரர்களுக்கு சிறந்த "ரோல் மாடல். "பேட்டிங் நுணுக்கத்தில் இவருக்கு நிகரான வீரரை கண்டறிவது கடினம்.
-கவாஸ்கர்

குறை காண முடியாத சிறந்த வீரர் டிராவிட். இவரை போன்ற இன்னொரு வீரர் ஒரே இரவில் உருவாக வாய்ப்பு இல்லை. இதற்கு நீண்ட காலம் தேவைப்படும். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே டிராவிட்டாக முடியும்.
-கங்குலி

கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் எல்லாம் கற்றுத் தந்தார். ரஞ்சி, டெஸ்ட் என எந்தப் போட்டியாக இருந்தாலும் முழு அளவில் தயாராக இருப்பார். போட்டிகளில் அவர் செலுத்திய கவனம் பிரம்மிப்பை ஏற்படுத்தும். இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரும் ஜாம்பவனாக டிராவிட்டை குறிப்பிடலாம்.
-ஹர்பஜன்

உலகில் ஒரு டிராவிட் தான் இருக்க முடியும். "டிரஸ்சிங் ரூமிலும், களத்திலும் இனி அவரை சந்திக்க முடியாது. மணிக்கணக்கில் களத்தில் விளையாடியது, சதம் அடித்த "பார்ட்னர்ஷிப் குறித்த, இனிமையான கிரிக்கெட் நினைவுகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன். 164 டெஸ்டில் பங்கேற்று, 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒருவருக்கு, எவ்வித பாராட்டும் போதுமானதாக இருக்காது.
-சச்சின்

டிராவிட்டுடன் சேர்ந்து விளையாடியதை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். இந்திய அணிக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இளம் வீரர்களுக்கு குருவாக இருந்தார். இவரது ஓய்வு அணிக்கு இழப்பு தான்.
-கும்ளே

கிரிக்கெட் குறித்த ஞானம் டிராவிட்டுக்கு அதிகம். ஆட்ட நுணுக்கங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார். இனி, களத்தில் இவரை "மிஸ் பண்ண வேண்டியிருக்கும்.
-லட்சுமண்

இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நீடித்திருக்கலாம். இவரது கிரிக்கெட் திறமை குறையவில்லை. நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் இவர் மட்டுல்ல, மற்ற வீரர்களும் சோபிக்கவில்லை.
-ஜி.ஆர்.விஸ்வநாத்

என்னை பொறுத்தவரை, நெருக்கடியான தருணத்தில் அணியை மீட்கக் கூடிய ஒரே வீரராக டிராவிட் திகழ்ந்தார். எதிரணியை சமாளித்து அணியை கரை சேர்ப்பதில் வல்லவர்.
-ஸ்ரீநாத்

சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட. அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடக் கூடிய மகத்தான வீரர். தனிப்பட்ட முறையில் பார்த்தால், நான் பணியாற்றியவர்களில் டிராவிட் தான் சிறந்தவர்.
-ஜான் ரைட்(முன்னாள் இந்திய பயிற்சியாளர்)


கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டிருந்தார். அவரது ரத்தத்திலும் இதயத்தில் கிரிக்கெட் கலந்து இருந்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர்.
-வாட்சன்(ஆஸி., வீரர்)

தன்னலமற்ற கிரிக்கெட் வீரர். உதவி மனப்பான்மை கொண்டவர். யாருக்கும் இல்லை என்று சொல்லாதவர். அனைத்து நேரங்களி<லும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.
-பாபு நட்கர்னி

துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இனியும் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற மனநிலையை எட்டியிருக்கிறார். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு விலகியுள்ளார். இதன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்.
-அன்ஷுமன் கெய்க்வாட்

இளம் வீரராக அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் பேசியது, பந்துவீசியது, "டிரஸ்சிங் ரூமை பகிர்ந்து கொண்டது போன்றவை சிறந்த அனுபவங்கள். இன்னொரு டிராவிட் உருவாக வாய்ப்பில்லை.
-பிரக்யான் ஓஜா

டிராவிட்டின் மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை வியப்பை ஏற்படுத்தும். மிகச்சிறந்த மனிதர் மற்றும் கிரிக்கெட் வீரர். இவரை நிறையவே "மிஸ் பண்ணுவோம். வாழத்துக்கள் டிராவிட்.
-யுவராஜ்

மீண்டும் ஒரு முறை சீனப் பெருஞ்சுவரை உருவாக்க முடியாது. இதே போல இன்னொரு டிராவிட் கிடைப்பது அரிது. இவரது ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது கடினம்.
-அஜித் வடேகர்

கடந்த 20 ஆண்டுகளில் உலகம் மதித்த கிரிக்கெட் வீரர்களில் டிராவிட்டும் ஒருவர்.
-மைக்கேல் வான்(இங்கிலாந்து )

கிரிக்கெட் கண்டெடுத்த சிறந்த வீரர்களுள் டிராவிட்டும் ஒருவர். என்னை கவர்ந்த 5 சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடம் பெறுகிறார். மற்ற நான்கு பேர் லாரா, சச்சின், பாண்டிங் மற்றும் காலிஸ்.
-அலெக் ஸ்டூவர்ட்(இங்கிலாந்து)

சிலர் விதிப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். ஆனால், டிராவிட் வெற்றி பெற வேண்டும் என்ற மனஉறுதியால் சாதித்துக் காட்டினார்.
-நவ்ஜோத் சிங் சித்து

கிரிக்கெட் ஜாம்பவனாக திகழ்ந்தார் டிராவிட். இனி இந்த பெருஞ்சுவரை "மிஸ் பண்ணுவோம். மிகச் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அமையப் பெற்ற இவருக்கு வாழ்த்துக்கள்.
-கிறிஸ் கெய்ல்(வெ.இண்டீஸ்)

சிறந்த பேட்ஸ்மேனாக அடையாளம் காணப்பட்டார். கிரிக்கெட் அரங்கில் இவர் சாதித்ததை நினைத்து எப்போதும் பெருமைப்படலாம்.
-ஷான் போலக்(தென் ஆப்ரிக்கா)

எனது "ஹீரோ டிராவிட் விடைபெற்ற போது, மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இனிமையான நினைவுகளை தந்ததற்கு நன்றி. கிரிக்கெட் ஜாம்பவானான இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
-ஆகாஷ் சோப்ரா