ராஜினாமா முடிவில் தோனி - முன்னாள் வீரர்கள் ஆவேசம்

டெஸ்ட் தொடரில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. அடுத்து லார்ட்சில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. 1–0 என, முன்னிலை பெற்றவுடன் இந்திய வீரர்கள் வெற்றி மிதப்பில் சொதப்ப துவங்கினர். 

பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பினர். இவர்களை முன்னேற்ற பயிற்சியாளர் பிளட்சர் எதுவுமே செய்யவில்லை. சொந்தமண்ணில் வீறு கொண்டு எழுந்த இங்கிலாந்து அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று 3–1 என, கோப்பை வென்றது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடரை மோசமாக இழந்ததால், இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

இது குறித்து அணியின் முன்னாள் வீரர்கள் ஆவேசமாக கூறியது:      


அஜித் வடேகர்: கடினமான ஆடுகளம் கொண்ட லார்ட்சில் நாம் வென்றோம். இந்த முன்னிலையை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் பயிற்சியாளர் பிளட்சருக்கு இல்லை. இவர் அங்கு என்ன செய்து கொண்டுள்ளார். இவர் கிளம்பும் நேரம் வந்து விட்டது என நினைக்கிறேன். 

பேட்டிங்கில் தனது யுக்தியை மாற்றிக் கொண்ட தோனி, கேப்டன் பணியில் மட்டும் ஏன், தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கிறார். ‘தேர்டு மேன்’ பகுதியில் பீல்டரை நிறுத்தாதால், இங்கிலாந்து ஸ்கோரில் பாதியளவு ரன்கள் இப்பகுதியில் இருந்து தான் கிடைத்தன. அஷ்வினை முதல் டெஸ்டில் இருந்து சேர்த்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது வியப்பாக இருந்தது.      

குண்டப்பா விஸ்வநாத்: தோனியின் கேப்டன் பொறுப்பு, விக்கெட் கீப்பிங் பணிகள் திருப்தி தரவில்லை. அவரது மனதில் நினைப்பதை செய்தார். இத்தவறை திரும்ப திரும்ப தொடர்ந்தார். எப்போதுமே ஏதாவது அதிசயம் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதிசயம் என்பது அடிக்கடி நிகழாது. ஏதாவது ஒரு முறை தான் ஏற்படும். இதற்காக தோனியை இப்போது நீக்கக் கூடாது. அணியை வழிநடத்த இப்போதைக்கு அனுபவமான, சரியான வீரர் இவர் மட்டும் தான்.       

எரபள்ளி பிரசன்னா: இந்திய அணியில் பிளட்சரின் பங்கு என்பது ‘பூஜ்யம்’ தான். இதை உறுதியாக சொல்ல முடியும்.       

ஸ்ரீகாந்த்: பயிற்சியாளர் பிளட்சர் இந்திய அணிக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை. இளம் வீரர்கள், அனுபவமில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அணியில் 7 முதல் 8 வீரர்களுக்கு போதிய அனுபவம் உள்ளது. ஆனால், போராடும் குணத்தை இழந்து விட்டனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவில்லை.    

0 comments:

Post a Comment