பதிலடி கொடுக்க இளம் படை ரெடி - ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். 

இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இவர்கள் பணியை மேற்பார்வை செய்யவுள்ள ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, நேற்று அணியினருடன் இணைந்தார்.

 இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டலில் நடக்கவுள்ளது. ஒருநாள் அரங்கில் ‘உலக சாம்பியன்’ இந்தியா தான். சர்வதேச தரவரிசையிலும் ‘நம்பர்–2’ (112 புள்ளி) ஆக உள்ளது. 

இங்கிலாந்து அணி (109) ஐந்தாவது இடத்தில் தான் உள்ளது. ‘நடப்பு உலக சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்க, இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) உள்ளது.

இப்போதைய நிலையில், இங்கிலாந்து மண்ணில் மற்றொரு தொடரை இழக்காமல் இருப்பதே முக்கியம். ஒருநாள் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்.


கோஹ்லி எழுச்சி:

நேற்று முன்தினம் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோஹ்லி (10 இன்னிங்ஸ், 134 ரன்கள்), பயிற்சியில் 71 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இவர் தான் இப்போதைய ‘ரன் மெஷின்’. இதுவரை 134 போட்டிகளில், 5,634 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 19 சதம், 30 அரைசதங்கள் அடங்கும். இவருடன் ரெய்னாவும் இணைந்து அசத்த உள்ளார்.


சபாஷ் சஞ்சு:

அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், 19, தவால் குல்கர்னி, 25, உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இளம் வீரர்களுக்கான தொடரில் மிரட்டியவர்கள். கடந்த ரஞ்சி சீசனில் கேரள அணிக்காக பங்கேற்ற சாம்சன் 530 ரன்கள் குவித்தார். இவர் துடிப்பான விக்கெட் கீப்பர் என்பது கூடுதல் சிறப்பு.


கரண் கலக்கல்:

சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா, 23, ஐ.பி.எல்., தொடரில் ஐதாராபாத் அணிக்காக ரூ. 3.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.  ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது ‘எக்கானமி ரேட்’ 3.93 தான்.

அடுத்து வேகப்பந்து வீச்சாளர் குல்கர்னி, 58 முதல்தர போட்டிகளில் 181 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இவர்களுடன் அனுபவ ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ஜடேஜாவும் கைகொடுக்கலாம்.


தோனிக்கு சவால்:

தரவரிசையில் இங்கிலாந்து பின்தங்கியிருந்தாலும், சொந்தமண்ணில் அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுத் தராது. இதனால், டெஸ்ட் தொடரை போல, ஒருநாள் போட்டிகளிலும் கேப்டன் தோனிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

0 comments:

Post a Comment