ரூ. 400 கோடி கொடு - இழப்பீடு கேட்கிறது பி.சி.சி.ஐ

இந்திய தொடரில் இருந்து பாதியில் விலகிய வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. சுமார் ரூ. 400 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வலியுறுத்தியுள்ளது.    
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), வீரர்கள் சங்கம் இடையில் சமீபத்தில் புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் 75 சதவீத அளவுக்கு சம்பளம் குறைந்ததால், வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலக முடிவு செய்தனர். நான்காவது ஒருநாள் போட்டிக்குப் பின், மீதமுள்ள தொடரை புறக்கணித்து, நாடு திரும்பினர். இது, ‘கிரிக்கெட் வல்லரசான’ இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடும் கோபத்தை ஏற்படுத்தியது.                               
டபிள்யு.ஐ.சி.பி., இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வேலைகளில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது. தொடர் ரத்தானதால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட இழப்பீடு கேட்பது,  2016ல் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள தொடரை புறக்கணிப்பது, ஐ.பி.எல்., தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை நீக்குவது உள்ளிட்டவை  பல அதிரடி முடிவுகள் நாளை ஐதராபாத்தில் நடக்கவுள்ள பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.       

இழப்பீடு எவ்வளவு: வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து ஒருநாள், ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் நான்கு ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியது. 

மீதமுள்ள ஒரு ஒருநாள், ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’, 3 டெஸ்ட் போட்டிகள் என 17 நாட்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதில் இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்திருப்பதால், மீதமுள்ள 12 நாட்களுக்கு இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டுள்ளது. 

நாள் ஒன்றுக்கு  வருமானமாக ரூ. 33 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி 12 நாட்களுக்கு ரூ. 396 கோடி வருகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 400 கோடி இழப்பீட்டு தொகையாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டிடம் கேட்க பி.சி.சி.ஐ., முடிவு செய்து உள்ளது.    
  
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில், ‘‘தொடர் ரத்தானதால் எங்களுக்கு ரூ. 400 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தான் தரவேண்டும். இதுகுறித்து ஐதராபாத்தில் நாளை நடக்கவுள்ள செயற்குழுவில் விவாதிக்க உள்ளோம்,’’ என்றார்.

0 comments:

Post a Comment