முறைகேடு செய்ததா கபில் நிறுவனம்?

மைதானத்தில் விளக்கு பொருத்தியதில் நடந்த முறைகேடு குறித்து, கபில்தேவ் நிறுவனம் மீது அரசு விசாரணை நடத்த வேண்டும் என, கோவா கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ.,) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், 55. கடந்த 1983ல் உலக கோப்பை வென்று தந்தார். 

இவர், ‘தேவ் முஸ்கோ லைட்டிங்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் சார்பில் கோவா கிரிக்கெட் மைதானத்தில், ஒளி விளக்கு பொருத்தும் பணி நடந்தது.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக ஜி.சி.ஏ., தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜி.சி.ஏ., துணைத்தலைவர் ஷேகர் சால்கர் கூறியது:

கபில்தேவின் நிறுவனம் நொய்டாவில் உள்ளது.  இது எப்படி ஜி.சி.ஏ., பட்டியலில் வந்தது. இவரது நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவது குறித்து நிர்வாகக்குழுவில் அனுமதி எதுவும் வழங்கவில்லை. இது எப்படி தரப்பட்டது என்றே  தெரியவில்லை.

சில ஆண்டுக்கு முன், ரூ. 4 கோடிக்கும் அதிகமான செலவில், விளக்குகள் பொருத்தியுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு இதை விட குறைந்த செலவில், மற்றொரு மைதானத்துக்கு கோவா அரசு சார்பில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதனால், ஜி.சி.ஏ.,யுடன், கபில்தேவ் நிறுவனத்துக்கு உள்ள தொடர்பு குறித்து, கோவா அரசு விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஷேகர் சால்கர் கூறினார். 


காரணம் என்ன:

கோவா கிரிக்கெட் சங்கம் தற்போது, தலைவர் வின்டோ பத்கே, துணைத்தலைவர் ஷேகர் சால்கர் தலைமையில் இரு பிரிவுகளாக செயல்படுகிறது. 

வின்டோ முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஷேகர் சால்கர் குற்றம் சுமத்தினார். இதுகுறித்து ஏற்கனவே கோவா அரசு விசாரிக்கிறது. இந்நிலையில் தான் கபில்தேவ் நிறுவனத்தின் மீது புகார் தரப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment