இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய அணி அசத்தல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாட்கள் தொடரில் பங்கேற்கிறது. 

முதலில் நடந்த ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ம.பி.,யின் இந்துாரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, அஷ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஹர்பஜன் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் சர்மா (1) போல்டானார். அடுத்து வந்த அஜின்கியா ரகானே, ஸ்டைன் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார்.  ஷிகர் தவான் (23) நிலைக்கவில்லை. 

விராத் கோஹ்லி (12) ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய ரகானே (51) அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ரெய்னா ‘டக்–அவுட்’ ஆனார். அக்சர் படேல் (13), புவனேஷ்வர் குமார் (14) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தோனி அரைசதம் கடந்தார். ஹர்பஜன் சிங் (22) ஆறுதல் தந்தார். உமேஷ் யாதவ் (4) ஏமாற்றினார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (92), மோகித் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 3, மார்னே மார்கல், இம்ரான் தாகிர் தலா 2, ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (17) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (34), டுமினி (36) ஆறுதல் அளித்தனர். பொறுப்பாக ஆடிய டுபிளசி (51) அரைசதம் கடந்தார். கேப்டன் டிவிலியர்ஸ் (19) சோபிக்கவில்லை. டேவிட் மில்லர் (0) சொதப்பினார். ஸ்டைன் (13) நிலைக்கவில்லை. 

கடைசியில் இம்ரான் (9), மார்கல் (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 43.4 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து ஒரு நாள் தொடர் 1–1 என, சமன் ஆனது.

0 comments:

Post a Comment